காவிரி என்றால் காவிரி, பொன்னி ஆறு
1. சொல் பொருள்
(பெ) 1. காவிரி ஆறு, 2. பொன்னி ஆறு
2. சொல் பொருள் விளக்கம்
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப்பெயர் பெற்றது. கா என்றால் சோலை.
காவிரி ஆற்றைக் ‘காவேரி’ என்று வழங்குவதும் உண்டு. இகரம் எகரம் ஆகும் இசைத்தன்மையால் ‘வி’ என்பது ‘வே’ ஆகி ‘காவேரி’ என்று ஆகிவிட்டது.
தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றிப் பாய்வதால் பொன்னி என்னும் பெயர் வந்தது.

மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
River Kaviri, Caviri also known as Cauvery, Kaveri
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248
மலை தலைய கடல் காவிரி/புனல் பரந்து பொன் கொழிக்கும் – பட் 6,7
மாஅ காவிரி மணம் கூட்டும் – பட் 116
கங்கை வாரியும் காவிரி பயனும் – பட் 190
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி/கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 527,528
அலர் ஆகின்றால் பெரும காவிரி/பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/2,3
காவிரி மலிர் நிறை அன்ன நின் – ஐங் 42/3
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு – பதி 50/6
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் – பதி 73/11

காவிரி படப்பை நன் நாடு அன்ன – பதி 90/47
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/6
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று – அகம் 62/9
அம் தண் காவிரி போல – அகம் 76/12
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – அகம் 126/5
புதுவது வந்த காவிரி/கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/14,15
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின் – அகம் 177/16
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி – அகம் 181/12
காவிரி வைப்பின் போஒர் அன்ன என் – அகம் 186/16
காவிரி படப்பை பட்டினத்து அன்ன – அகம் 205/12

இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/22
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் – அகம் 222/8
விடியல் வந்த பெரு நீர் காவிரி/தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு – அகம் 226/10,11
கழை அளந்து அறியா காவிரி படப்பை – அகம் 326/10
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ – அகம் 376/11
காவிரி படப்பை உறந்தை அன்ன – அகம் 385/4
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட – புறம் 35/8
மிக்கு வரும் இன் நீர் காவிரி/எக்கர் இட்ட மணலினும் பலவே – புறம் 43/22,23

நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே – புறம் 58/1
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – புறம் 68/9
பூ விரி புது நீர் காவிரி புரக்கும் – புறம் 166/28
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி/மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – புறம் 174/8,9
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – புறம் 385/8
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – புறம் 393/23
காவிரி கிழவன் மாயா நல் இசை – புறம் 399/12
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது