Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. உழக்கு, சிதை, 2. நிலைகுலையச்செய், 3. கல, 4. பிறர் மனத்தைக் கவர், கவர்ந்து தன்வசப்படுத்து,  5. ஊடலுணர்த்து, 6. கீழ்மேலாகப் புரட்டிப்போடு,

2. (பெ) 1. பொருள் மயக்கம், 2. மயக்கம், குழப்பம், 

சொல் பொருள் விளக்கம்

உழக்கு, சிதை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

damage, ruin, unsettle, mix up, allure, charm, fascinate, clear one’s misunderstanding, as in sulks, turn upside down, ambiguity, equivocalness, confusion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் கடல் கரையது சிறுவெண்காக்கை
 களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
 பனி கழி துழவும் பானாள் – குறு 246/1-3

பெரிய கடற்கரையில் உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள்,
யானையின் காதைப் போன்ற பச்சை இலைகளை உழக்கி,
குளிர்ந்த கழிநீரைத் துழாவி மீன்தேடும் நள்ளிரவில்

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/1,2

வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,

மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
போந்தது வையை புனல் – பரி 10/6-8

மாமரத்தின் காண்பதற்கு இனிமையான தளிரோடு, வாழை இலைகளையும் கலந்து
ஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு ஓசைகள் ஒலிக்க, கரைக் காவலர் பறை அறைய,
போகிறது வையையின் வெள்ளம்;

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/10,11

பாலின்கண் பெய்து அடப்பட்ட சோற்றை தேனொடு கலந்து உண்டு
குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட

மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/49

மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்_வழி
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/10,11

நெஞ்சைச் சுடும்படியாக நீ செய்வதைக் கடிந்துகொள்வார் இல்லாதபோது
“மனத்தால் நான் தீது இல்லாதவன்” என்று எம் ஊடலைத்தீர்க்க வருவாய்

கானவர், கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/15,16

வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தைக் கீழ்மேலாகப் புரட்டி உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண்
சாலமன் பாப்பையா உரை

மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு – புறம் 239/18

பொருள்மயக்கம் தரும் சொற்களைச் சொல்லமாட்டான்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/11

மருட்கையினின்றும் நீங்கி, அம் மருள் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *