Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கரும்பொன், 2.கருநிறமுடைய உலோகம் ‘இரும்பு’ எனக் காரணப் பெயர் பெற்றது

இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பொருள், ஆயுதம்

சொல் பொருள் விளக்கம்

இரும்பு என்ற செந்தமிழ்ச் சொல் இரு என்ற தமிழ் முதலடிப் பிறந்ததென்றும், அம்முதற்குக் கருமை என்னும் பொருள் என்றும் கருநிறமுடைய உலோகம் ‘இரும்பு’ எனக் காரணப் பெயர் பெற்றது என்றும் அம்முதல் அடியாக இருள், இருட்டு, இரவு, இரந்தை (கரி) முதலிய சொற்கள் பிறந்துள்ளன என்றும் கூறிக் கரும்பொன் என இரும்புக்கு மற்றொரு பெயர் இருத்தலையும் சுட்டி இரும்பின் உண்மை வடிவைக் காட்டுவர் செந்தமிழ் அறிஞர். (செந்தமிழ்ச் செல்வி. 3: 310.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

iron, the black metal

Instrument, weapon made of iron

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை – நற் 249/1

இரும்பைப் போன்ற கரிய கிளைகளையுடைய புன்னைமரத்தின்

இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193

கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின

நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப – பெரும் 285,286

நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்

கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த – பெரும் 437

வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80

பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து

இரும்பு கவர்வு_உற்றன பெரும் புன வரகே – மலை 113

(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்

இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த – நற் 133/9

இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த

புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன்
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் – பதி 74/10-14

புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,
கூர்மையை உடைய ஊசியால், உள்புறத்தில் தைத்து, தொழிலில் வல்லவன்
சூடுவதற்குரிய நிலையை உண்டாக்கி, ஒளி திகழும் தோற்றத்தை உண்டாக்குவதால்

இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58

வாளால் இரண்டாக அரியப்பட்ட மாவடுவைப் போன்ற, மை தீட்டப்பெற்ற கண்ணின் ஒளி பாய்ந்து

இரும்பு ஊது குருகின் இடந்து – அகம் 81/5

இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் உயிர்த்துப் பெயர்த்து

இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் – புறம் 309/1

இரும்பாலாகிய படைக்கலங்கள் வாய் மடிந்து ஒடியும்படியாகப் பகைவரைக் கொன்று

பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8

பிடியானை மூச்சுவிட்டாற் போலக் காற்றுவிடும் கைகோப்புப் பொருந்திய உலைத்துருத்தியின் வாயிரும்பு போலும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *