Skip to content

இறத்தல்

சொல் பொருள்

இறத்தல் என்பது கடத்தல்.

கூரையில் சுவரைக் கடந்து நிற்கும் பகுதிக்கு அது பெயர்.

யாவற்றிற்கும் உறைவிடமாகிய முதல்வனிடத்திற்கு உயிர்கள் கடந்து போதலை சாதல் எனக் காட்டுவான் இறத்தல் என்று அதை விளம்பினர்.

சொல் பொருள் விளக்கம்

இறத்தல் என்பது கடத்தல்.

“இறந்த வெகுளியில் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு”

இக்குறளில் ‘இறந்த’ என்பதன் பொருளை நோக்குக.

இறந்த காலம் என்பதிலும் அதுவே பொருள். வீட்டுக் கூரையில் ஒரு பகுதியை ‘இறப்பு’ என்று சொல்வதுண்டு. இறப்பென்றால் இழவன்று. கூரையில் சுவரைக் கடந்து நிற்கும் பகுதிக்கு அது பெயர்.

“இறையுயர் மாடம் எங்கணும் போர்த்து” (சிலம்பு. நாடுகாண். 145.)

இவண் இறை – இறப்பு என்று அருஞ்சொல் உரையில் கண்டிருப்பது கருதத் தக்கது. இறை என்றால் கடவுள் என்றொரு பொருளுமுண்டு; கடவுள் – கடந்து நிற்பவன் அல்லது கடத்தல். இற – கட. இறை – கடந்தவன். (புதிதாய்ப் பிறக்கும் நிலா பிறை எனப்படுவது போல் என்க)

உடலைவிட்டு உயிர் நீங்கும் நிகழ்ச்சியைப் பற்றித் தமிழருக்கிருந்த எண்ணம் இதனால் புலப்படும். பிறமக்களைப் போல் அவர்கள் அதை நினைத்துத் திடுக்கிட்டு நடுக்கந்தரும் பெயர்களை அதற்கிடவில்லை. அதை வாழ்க்கையின் இறுதி என அவர்கள் துணியவில்லை…. யாவற்றிற்கும் உறைவிடமாகிய முதல்வனிடத்திற்கு உயிர்கள் கடந்து போதலை சாதல் எனக் காட்டுவான் இறத்தல் என்று அதை விளம்பினர். இறை: உயர்ச்சி, பெருமை, வேந்தன் என்பவற்றையும் குறிக்குமாற்றால் உயிர்துறத்தல் ஒருவகையில் மேன்மை அடைதல் என்றும் கருதப்பட்டது என்பது விளங்கும். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 85 -6)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *