Skip to content

1. சொல் பொருள்

(பெ) சங்க காலச் சிற்றரசன்

2. சொல் பொருள் விளக்கம்

சங்க காலச் சிற்றரசன்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழையன் என்பவன் மோகூர் மன்னன். வேம்பு இவனது காவல்மரம். எனவே, இவன் பாண்டியர் குடிச்
சிற்றரசன் எனலாம். செங்குட்டுவன் இவனது காவல்மரத்தை வெட்டி இவனை ஒடுக்கினான் எனப்
பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம் கூறுகிறது.

பழையன் மோகூர் அவை_அகம் விளங்க
நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 508,509

பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,

பழையன் என்ற போரூர் மன்னன் ஒருவனும் இருந்தான். இவன் சோழநாட்டைச் சேர்ந்தவன்.
இவன் போர் கிழவோன் பழையன் எனப்பட்டான். இவன் சோழன் பெரும்பூண் சென்னியின்
படைத்தலைவன். இவன் சோழரை எதிர்த்த கொங்குநாட்டாரைப் பணியச்செய்தான்.

கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8

வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல

இந்தப் பழையன் கட்டூர் என்ற இடத்தில் ஏழு பேரால் தாக்கிக் கொல்லப்பட்டான்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என – அகம் 44/7-11

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த கட்டூரில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,

வென்வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன- அகம் 186/14-16

வெற்றி பொருந்திய வேலையும்,
மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும், மேகம் போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையனின்
காவிரிநாட்டிலுள்ள போர் என்னும் ஊரினை ஒத்த

வென்வேல்
இழை அணி யானை சோழன் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பை
புனல் மலி புதவின் போஒர் கிழவன்
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/9-12

இந்தப் பழையன் சோழன் மறவன் எனப்படுவதால் இவன் சோழனின் படைத்தளபதி என்பது பெறப்படும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *