சொல் பொருள்
(பெ) 1. ஈன்றணிமை, 2. அண்மையில் மழை பெய்தது, 3. அண்மையில் கதிர்விட்டது, பிஞ்சுத்தன்மை, 4. புதியது, 5. கசடு,
சொல் பொருள் விளக்கம்
1. ஈன்றணிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Recency of delivery, as of a woman, (place) that had rains recently, recently formed ear of grain, greenness as of unripe fruit, raw, fresh, rubbish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8 ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழந்தைக்குச் சுரக்கும் முலை போல புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132 ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில், இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி – நற் 271/1 கரிய, அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று, வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு – நற் 383/3,4 மசக்கை நோயால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2 கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/17,18 மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க, மென் மயில் புனிற்று பெடை கடுப்ப – புறம் 120/6 மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை ஒப்ப புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4 அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய் இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/3,4 நிறைந்த நீருள்ள புதிதாய் மழைபெய்த நிலங்களில் புகுந்து, அத்துடன் நிற்காமல் எமது பெரிய ஊர்ப்புறத்தையும் சூழவரும் பெரிய குளிர்ந்த வாடைக்காற்றே! துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி – நற் 206/1 மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்க புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய் வயலை செம் கொடி – ஐங் 25/1,2 மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய வயலையின் சிவந்த கொடியை செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3 செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளமையான கதிரை பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6 பூ நிறைந்த காவினையும், புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 49,50 (நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய, அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே, புயல் புனிறு போகிய பூ மலி புறவின் – மலை 120 மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்