Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை,  2. தாவு

சொல் பொருள் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

come, leap, gallop

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
நாண் இலி நாட்டு மலை – கலி 42/8-12

வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே! நாம்
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா!”
“காண்பதற்கு வா தோழியே! மலையிலிருந்து இறங்கி
வெள்ளை நிறத்தில் விழுகின்ற அருவியைப் பெற்றுள்ளது, நம் மீது அருள்கொள்ளாத
அந்த நாணம் கெட்டவன் நாட்டு மலையை!”

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/1-4

சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!

விசும்பு விசைத்தெறிந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ – அகம் 273/1,2

வானில் வேகங்கொண்டு எறிந்த கூதாளியின் மாலை போல
பசிய காலினையுடைய வெள்ளாங்குருகுதாவும் சிறகினை வளைத்து

வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா
தாஅ தாளிணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏமதி வலவ – அகம் 134/7-9

தாவிச்செல்லும் தாளச்சீர் விளங்கும் நடை வாய்ந்த செருக்கிய குதிரையின்
தாவிச் செல்லும் இணை ஒத்த கால்கள் மெல்லென நடக்கும்படி
தாற்றுக்கோலால் குத்துதலை மறந்து செலுத்துவாயாக, பாகனே

வாம் பரிய கடும் திண் தேர்
காற்று என கடிது கொட்பவும் – மது 51,52

தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
– வாம் பரி – வாவும் பரி; வாவும் என்னும் செய்யும் என் வாய்பாட்டுப் பெயரெச்சம் – பொ.வே.சோ விளக்கம்

பறவைகள் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து பறப்பதற்காக, சிறகுகளை மேலுயர்த்தி விரித்து,
இரண்டு கால்களும் பின்னோக்கி இருக்க, உடம்பினை முன்னோக்கி நீட்டி எழும்பிப் பறக்கும் நிலையே
வாப் பறை எனப்படும். குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் பின்னங்கால்கள் பின்னோக்கி இருக்க, முன்னங்
கால்கள் முன்னோக்கி நீண்டிருக்கத் தாவிச் செல்லுவதையே வாவுதல் என்கிறோம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *