Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உபாயம், 2. தின்பண்டம், 3. பயன், 4. விவேகம்

சொல் பொருள் விளக்கம்

உபாயம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

expedient, confectionery, use, discretion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 1-3

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து, விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது, வேற்றுப்புலத்தை எய்த நினைத்த உபாயத்தை அறிந்த பொருநனே

வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ – பொரு 108

வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி – உபாயங்களாற் பண்ணுதலால் விரகு என்றார், ஆகுபெயர்

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380

நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன் அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும் தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது; தூய அணிகலன்கள் அணிந்த மகளிர் வாழும் சேரியில் தோன்றும் தேரையுடைய தலைவனுக்கு நாம் ஒத்துவரமாட்டோம்; அதனால், பொன் போன்ற நரம்பைக் கொண்ட இனிய ஓசையைக் கொண்ட சிறிய யாழை இசைப்பதில் வல்லவன் என்றாலும், என்னை வணங்கிநிற்கவேண்டாம்; கொண்டுபோய்விடு, பாணனே! உன்னுடைய குளிர்ந்த துறையையுடைய மருதநிலத்தானை! சிறந்த என் வீட்டிலிருந்து பாடவேண்டாம்; என் உள்ளம் அதற்கு ஒருப்படாது; நீண்ட நேரம் நிற்பதால் குதிரைகளும் தாம் தேரில் பூட்டப்பட்டிருக்கும் நிலையை வெறுக்கின்றன; பயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாம், நான் விரும்பியது எனக்கு இல்லாத போது
– விரகு – பயன் – ஔவை.சு.து.உரை, விளக்கம்

விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/12,13

வேண்டாம் என்று தள்ளிவைக்கப்பட்ட மகளிர் விவேகம் இன்றி கூறிய சொற்கள் பொய்யாக இருக்க, அவறைக் கடிந்துகூறாதது மட்டுமன்றி என்னை இடித்துரைக்கவும் வந்துவிட்டாய்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *