Skip to content

சொல் பொருள்

(பெ) அழகுத்தேமல், நுண்ணிய மஞ்சள் நிறப் புள்ளிகள்

சொல் பொருள் விளக்கம்

அழகுத்தேமல், நுண்ணிய மஞ்சள் நிறப் புள்ளிகள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fine yellow spots on the skin of the body

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே – நற் 157/8-10

சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
அழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல
நுண்ணிய பலவான தேமற்புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி

பெண்களின் மார்புப்பகுதியில் தோன்றும் சுணங்கு என்ற புள்ளிகள் வேங்கை மரத்துப் பூக்களைப் போன்று சற்று பெரிதானவை.

தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17

என்ற அடி இதனை அறிவுறுத்தும். ஆனால் தித்தி என்ற புள்ளிகள் வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போன்றவை என்பதை

வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி

என்ற சொற்கள் விளக்குகின்றன.

பார்க்க சுணங்கு

கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் – நற் 160/3-5

மென்மையாக
மேன்மேலே தோன்றிய தித்தியையும், எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கைகளின் மேலே
அள்ளித்தெளித்தாற்போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்

தித்தி என்பது வயிற்றின்மேலே தோன்றுவது என்பர் பின்னத்தூரார். ஆனால், ஔவை.துரைசாமி அவர்கள், இதற்கு

மெல்லென முற்பட மேலே பரந்த தித்திபொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும் விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும் என்று உரை கூறுவார்.

இவர் தித்தி என்பது வரிவரியாகத் தோன்றுவது என்றும், சந்தனக் குழம்பைக் கைவிரலால் தெறித்தாற்போலத் தோன்றுவது சுணங்கு என்றும் கூறுவார்.

எதிர்த்த தித்தி முற்றா முலையள் – நற் 312/7

என்ற நற்றிணை அடியும் எதிர்த்த தித்தி என்பதால், இது மேலேறிப் படரும் தன்மையுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே தித்தி என்பது வயிற்றின் அடிப்பாகத்தில் சிலவாகவும், மேலே படர்ந்து விரிந்து பலவாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது.

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6

நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க

தித்தி என்ற இவ்வகைத் தேமல், தொடைப்பகுதியிலும் காணப்படும் என்பதை மேலே கண்ட அடிகள் நிறுவுகின்றன. குறங்கு என்பது தொடை.

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ – அகம் 385/9,10

வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட

என்ற அடிகளும், தித்தி தொடைப்பகுதியிலும் படர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே – குறு 300/3,4

ஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண்ணிய பல தேமல் – இவற்றையுடைய மாநிறத்தவளே!

இந்தத் தித்தி என்பது வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போல் இருக்கும் என்று முன்பு கண்டோம். மேலே கண்ட இந்தக் குறுந்தொகை அடிகள், தித்தி என்பது தாமரைமலரின் பூந்தாதுக்கள் போன்று நுண்ணியதாகவும்,பலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இவை மேனியில் எந்தவோர் இடத்திலும் காணப்படும் என்றும் உணர்த்துகின்றன.

உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/17,18

அங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும்,
ஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும்
உடைய உன் மனைவி

ஊரல் அம் வாய் உருத்த தித்தி – அகம் 326/1

ஊரலாகிய அழகுவாய்ந்த உருப்பெற்ற தேமல்.

என்ற அகநானூற்று அடிக்கு ஊரலாகிய தித்தி என்று பொருள்கொள்வர் வேங்கடசாமி நாட்டார். இவர் ஊரல் என்பதுவும் இரு தேமல் வகை என்பார்.

நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3

நுட்பமான அழகிய ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும்
இடையினையும்

என்ற கலித்தொகை அடி, தித்தி என்பது ஒளிவிடும் புள்ளி என்கிறது. இது இடைப்பகுதியிலும் காணப்படும்.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/13-16

மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி

என்ற அகநானூற்று அடிகள் தித்தியைப் பற்றிய விளக்கமான குறிப்புகளைத் தருகின்றன. பூங்கொத்துக்களில் உள்ள பூக்களின் மேல் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால், அந்தக்கொத்துக்களில் உள்ள பூந்தாதுக்கள், தேனுடன் கலந்து கீழேயுள்ள செடியின் தளிர்களில் தெறித்துவிழுகின்றன. அதைப் போல இருக்கிறதாம் பெண்களின் தளிர்மேனியில் பரவலாய்க் காணப்படும் நுண்ணிய பல தேமல் புள்ளிகளான தித்தி.

வடித்து என உருத்த தித்தி – அகம் 176/23

என்கிற அகநானூற்று அடிக்கு, ‘பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும்’ என்று
பொருள்கொள்வார் வேங்கடசாமி நாட்டர்.
எனவே இது பொன்னிறம் கொண்டது என்பது தெளிவாகிறது.

மேலும்,

தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் – உஞ்ஞை 41/97

என்ற பெருங்கதை அடியால் தித்தி என்ற தேமல், இடுப்பைச் சுற்றி, இடுப்பிற்கும் சற்றுக் கீழான
அல்குல் பகுதியிலும் படர்ந்திருக்கும் எனத் தெரியவருகிறது.

எனவே, பெண்களின், இடைப்பகுதி, தொடைப்பகுதி மற்றும் மேனியின் பல பகுதிகளிலும், மிக நுண்ணியவாகவும், பலவாகவும் பொன் நிறத்தில் தோன்றும் ஒளிர்வுள்ள புள்ளிகளே தித்தி எனப்படும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *