Skip to content

சொல் பொருள்

(பெ) சங்ககால மன்னர்களின் ஒருவன்,

சொல் பொருள் விளக்கம்

இவனது முழுப்பெயர் ஓய்மான் வில்லியாதன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.
புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் புறநானூறு 379-ஆம் பாடலில் இவனது வள்ளண்மையைப் போற்றிப்
பாடியுள்ளார். இப் பாடலில் இவன் ‘நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.
இந்த வில்லியாதனைப் பாடிய இந்தப் புலவர் ஓய்மான் நல்லியாதனின் கொடையையும் (புற, 376) பாராட்டிப்
பாடியுள்ளார். இதே புலவர் புறம் 176-இல் ஓய்மான் நல்லியக்கோடன் என்பானைப் பற்றியும் பாடியுள்ளார்.
பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் ஓய்மானாட்டு
நல்லியக்கோடன் அப்பாடலில் ‘நன்மா இலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.
இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என்னும் பெயர் கொண்ட
மூவர் ஓய்மானாட்டில் சற்றேறக் குறைய ஒரே காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் எனத் தெரியவருகிறது.
இவர்கள் மூவரும் அண்ணன் தம்பியராய் அடுத்தடுத்தோ, ஆங்காங்கேயோ செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள்
என்பது புலனாகிறது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a chieftain in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெல் அமல் புரவின் இலங்கை கோமான்
வில்லியாதன் கிணையேம் பெரும – புறம் 379/6,7

நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான
ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப்பொருநராவோம், பெருமானே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *