Skip to content

அன்னிமிஞிலி

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககாலப் பெண்,

சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககாலப் பெண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a lady of sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை
அன்னிமிஞிலியின் இயலும் – அகம் 196/8-12

தன் தந்தையின் கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக,
நெடுமொழியினையுடைய கோசர்களைக் கொல்வித்து, மாறுபாடு தீர்ந்த
விரைந்த தேரையுடைய திதியனது அழுந்தூர் என்னுமிடத்தே, வளைந்த குழையினை அணிந்த
அன்னி மிஞிலி என்பாளைப் போல களிப்புற்று நடக்கும்.

பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/4-13

அன்னி மிஞிலி என்பவள் கோசர் குடிமகள். இவள் வாழ்ந்த ஊர் அழுந்தை
இவளது தந்தை ஆனிரை மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் சற்றே கண்ணயர்ந்துவிட்டான். அப்போது
அவனது பசு ஒன்று அருகில் பயறு விளைந்திருந்த வயலில் நுழைந்து மேய்ந்துவிட்டது. ஒன்றுமொழிக் கோசர்
மன்றத்தில் கூடிக், கண் அயர்ந்த குற்றத்துக்காக அவனது கண்ணைத் தோண்டி எடுத்துவிட்டனர். அன்னிமிஞிலி
கோசரைப் பழிவாங்க உறுதி பூண்டாள். உண்ணாமலும், நீராடி உடை மாற்றாமலும் படிவம் மேற்கொண்டாள்.
திதியனிடம் முறையிட்டாள். திதியன் கொடுமைப் படுத்திய ஒன்றுமொழிக் கோசரைக் கொன்றான். இந்த
மகிழ்ச்சியில் திளைத்த அன்னிமிஞிலி தன் அழுந்தூர்த் தெருவில் பெருமிதத்தோடு நடந்து சென்றாள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *