Skip to content

சொல் பொருள்

(வி.மு) 1. வருந்துவனவாக, 2. தூங்கட்டும், 3. சேர்ந்தவர்களாகட்டும், 

(வி.எ) 1. சிக்கிக்கொள்ள, 2. புகுவதற்கு,, 3. தூங்குவதற்கு, 4. படும்படி, விழும்படி, 5. பொருந்தி வருவதற்கு

சொல் பொருள் விளக்கம்

1. வருந்துவனவாக,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

let them suffer, let them sleep, let them belong to, having stuck, to enter, to sleep, to fall on, to come closely

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
——————————————– —
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58

நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவியைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்பட்டுத் துன்பப்படுவனவாக;
———————————- ————————
ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்தில் பூட்டப்பட்ட குதிரைகள்

புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/4,5

பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின் கரைக்குத் தலைவனை
இனி நினைக்கமாட்டேன் தோழி! படுத்துத் தூங்கட்டும் என் கண்கள்.

எவ்வி தொல் குடி படீஇயர் – புறம் 202/14

எவ்வியினுடைய பழைய குடியிலே படுவார்களாக

சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/7-11

சிறிய கண்களைக் கொண்ட பெரும் சினத்தைக் கொண்ட ஆண்பன்றி
சேற்றில் ஆடிய கருத்த முதுகில் புழுதியோடு அதன் நிறத்தைப் பெற்று,
வெறுமையான பிளவினில் மாட்டிக்கொள்ள, அதனைச் சூழ்ந்த வார்களை அழித்து,
வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில்

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என – நற் 98/1-5

முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் புகுவதற்கு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
சிறிய வாசலில் நுழையும் பொழுதில், விரைவாக
அருகே பக்கத்திலிருக்கும் பல்லி ஒலியெழுப்பினதாக

மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் – நற் 115/1-3

அகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்துத் தளர்ந்ததால்
சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்கவேண்டி
அன்னையும் சிறிது சினம் தணிந்து மெல்ல மூச்சுவிடுகிறாள்;

பயறு போல் இணர பைம் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை
காஞ்சி – குறு 10/2-4

பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் தங்கள் மேலே விழும்படி
உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட
காஞ்சி மரத்தை

வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் – அகம் 257/1-4

வேனிற்காலத்துப் பாதிரியின் வளைவையுடைய சிறந்த பூக்களின்
தேன் பொருந்திய வாடல் நாறுகின்ற பகற்பொழுதில் சுரத்தின் கண்ணே
பரற்கல் பொருந்திய சிலம்பினை அணிந்த நின் சிறிய அடிகள் சிவக்க
எம்முடன் ஒரு நெறியில் பொருந்திவரற்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *