Skip to content

சொல் பொருள்

(பெ) மகளிர்/இளம்பெண் விளையாட்டு, 

சொல் பொருள் விளக்கம்

மகளிர்/இளம்பெண் விளையாட்டு, பொய்தல் என்பது ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் மணலில் இளம்பெண்கள் அல்லது சிறுமியர் ஆடுகின்ற விளையாட்டு என இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, ஈரமான மணலில் சிற்றில் கட்டி
இன்றைக்கும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு என்பது பெறப்படும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

women’s/young girls’ game

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர்
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர – மது 582-589

(தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,
யாமத்திற்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற
முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய
குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரின் (அகத்தேயுள்ள)அரும்பொடு சேரக்கட்டின
நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய

நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181

நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான
மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர்
குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும்
துறையைப் பொருந்திய தலைவன் நம்மீது அன்புசெய்தால்
வாழ்வதற்கு இனியதாயிருக்கும் இந்த ஆரவாரமுள்ள ஊர்.

மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி – பரி 20/20-24

மகளிர் அணிதற்குரிய மாலைகளை மைந்தர் அணிந்துகொள்ளவும்,
மைந்தர்களின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்,
முந்திச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தினால் அணிகளை அணியும் முறைகளை மறந்து மாற்றி
அணிந்தவராய், சிற்றில் செய்து விளையாடுவோர் விளையாடிய, அழகிய வண்டுகள் பாடித்திரிந்த மணலைக் கொண்ட
ஒரோவழி, சிறுவர்களும் பொய்தல் விளையாட்டு விளையாடுவர் என்கிறது நற்றிணை.

பொலம் தொடி புதல்வனும் பொய்தல் கற்றனன் – நற் 166/7

பொன்னாலான தோள்வளை அணிந்த புதல்வனும் விளையாடக் கற்றுக்கொண்டான்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *