Skip to content

சொல் பொருள்

திருப்பதிமலை

சொல் பொருள் விளக்கம்

பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய திருப்பதிமலை. இந்த வேங்கட மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன என அறிகிறோம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The Tirupati Hills which formed the northern boundary of the ancient Tamil country

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மற போர் பாண்டியர் – அகம் 27/6-8

வடக்கிலிருக்கும்
வேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள,
வீரப் போர் புரியும் பாண்டியர்,

தொண்டைநாட்டு மன்னனான திரையன் திருவேங்கடமலைப் பகுதி நாட்டுக்கு அரசனாக இருந்தான்.

வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை – அகம் 85/9

இப்பகுதியைப் புல்லி என்பவன் ஒருகாலத்தில் ஆண்டுவந்தான்.
சங்ககாலத்தில், பொருள்தேடிச் சொல்வோர், இந்த வேங்கடத்தையும் கடந்து வடக்கே சென்றனர்

அவரே
மால் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் – அகம் 209/7-10

நம் தலைவர்
பெரிய யானையையும் வீரத்துடன் புரியும் போரினையுமுடைய புல்லி என்பானது
மூங்கில்களையுடைய நீண்டசாரல் பொருந்திய வேங்கடமலையின் அப்பாலுள்ள
குன்றுகளைக் கடந்து சென்றுளார்

வேங்கடத்துக்கும் அப்பாலுள்ள பகுதி வேற்றுமொழி பேசும் பகுதியாக இருந்தது.

பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயட் தேஎத்தராயினும் நல்குவர் – அகம் 211/7,8

குளிர்ச்சி பொருந்தியசோலைகளையுடைய வேங்கடமலையின் அப்பாலுள்ள
வேற்றுமொழி வழங்கும் நாட்டின்கண்ணராயினும் விரைந்து வந்து அருள்செய்வார்.

வேங்கடமலைக்கும் அப்பாலுள்ள இடம் வடுகர் நாடு எனப்பட்டது.

வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
——————– ———————-
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து – அகம் 213/1-8

போர்த்தொழில் பயின்ற யானைகளையுடைய வலிய போர் வல்ல தொண்டையரது
கூட்டமாய மேகங்கள் தவழும் ஏறுதற்கு அரிய நெடிய உச்சியினின்று இழியும்
உயர்ந்து தோன்றும் வெள்ளிய அருவிகளையுடைய வேங்கடமலைக்கு அப்பாலுள்ள
—————————————————-
வெள்ளிய நிணச்சோற்றினையுடைய வடுகரது தேயத்தேயுள்ள

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *