வகுளம் என்பதுமகிழம் மரம்.
1. சொல் பொருள்
(பெ) மகிழம்மரம்.
2. சொல் பொருள் விளக்கம்
மகிழம் அல்லது வகுளம் என்பது ஓர் மரம் ஆகும். பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கபடுகிறது. மகிழம் என்ற சொல் மங்கலம் (வளமை, புனிதம், முழுமை) என்ற பொருள்படும். மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி. இந்த மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார் திருத்தக்க தேவர்.
மகரந்தச் சேர்க்கைக்குப் பின்பு இதன் மலர் காம்பிலிருந்து கழன்று, ஒரு சிறு சிலந்திப் பூச்சி கீழே விழுவதைப் போன்று வீழ்கிறது என்றும் சீவக சிந்தாமணி கூறுகிறது. இந்தப் பூ சுழன்று வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்று திருத்தக்கதேவர் கூறுகிறார்
- குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று
- வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது
- சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம்பூ உள்ளது
- காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் ஒன்று
- திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Pointed-leaved ape flower, Mimusops elangi Sapotacea
![வகுளம்](https://solalvallan.com/wp-content/uploads/2021/05/வகுளம்-1.jpeg)
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா – குறி 70 குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி – பரி 12/79 நறும் தண் தகரம் வகுளம் இவற்றை - திணை150:24/1 கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ - தேம்பா:8 57/4 குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - மது:13/151 திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் - மணி:3/161 ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம் - சிந்தா:7 1650/2 மது கலந்து ஊழ்த்து சிலம்பி வீழ்வன போல் மலர் சொரி வகுளமும் மயங்கி - சிந்தா:10 2108/2 மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த - தேவா-சம்:1130/3 கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை - தேவா-சுந்:101/3 வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய - தேவா-சம்:2430/3 தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை - திருமந்:1003/3 மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் - 1.திருமலை:2 29/3 சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் - 7.வார்கொண்ட:4 4/3 நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம் - 1.திருமலை:5 93/1 வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் - நாலாயி:1498/3 சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை - திருப்:58/3 வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல் - திருப்:624/7 வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட - திருப்:1185/3 ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் - திருப்:219/5 அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் - திருப்:370/13 வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும் - திருப்:536/7 இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில் - திருப்:145/9
![வகுளம்](https://solalvallan.com/wp-content/uploads/2021/05/வகுளம்-2.jpeg)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்