Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒரு சேர மன்னன்,

பார்க்க : உதியஞ்சேரல்

2. சேரமன்னன் பெயர்கொண்ட ஒரு வள்ளல்,

3. நன்னனது இன்னொரு பெயர்

சொல் பொருள் விளக்கம்

1. ஒரு சேர மன்னன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a CherA king

a philanthropist with the name of the Chera king

another name for the chieftain nannan

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழலின் ஏங்கி – நற் 113/9-11

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மேற்கொண்டு செம்று செய்த ஆரவாரத்தையுடைய போரில்
போர்க்களம் பாடும் இசைவாணர்கள் இம்மென்ற ஓசை உண்டாக இசைக்கும்
ஆம்பலென்னும் குழலிசை போல அழுது

சேர அரசற்குரிய குடிவகையில் உதியர்குடி ஒன்று. உதியன் எனப் பொதுப்படக் கூறினமையின் அக்குடியில் சிறந்து
விளங்கிய பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பது கொள்ளப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்.

பல்லான் குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/4-7

பல்லான் குன்று என்னும் மலையில் பொருந்தும் நிழலின்கண் சேர்ந்த
நல்ல ஆனிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே
ஈகையாகிய கடனை ஏற்றுக்கொண்டகோட்டமில்லாத நெஞ்சினையுடைய
உதியன் என்பானது அடுக்களை போல

குழுமூர் சங்ககாலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. அது மலைச்சாரலில் அமைந்திருந்தது.
பசுக்கூட்டம் அங்கு மேயும். இவ்வூரில் இருந்த வள்ளல் உதியன். உதியன் என்னும் பெயர் சேர மன்னனை
நினவூட்டுகிறது. எனவே இந்த ஊர் சேரநாட்டுப் பகுதியில் இருந்தது எனத் தெரிகிறது.
உதியன் மடம் கட்டி அன்னதானம் செய்துவந்தான். அது ‘உதியன் அட்டில்’ என்று பெயர்பெற்றிருந்தது.
அதில் உணவு உண்போரின் ஒலி இரவு பகல் எந்த நேரத்திலும் கேட்டுக்கொண்டே இருக்குமாம் – விக்கிப்பீடியா
சேர மன்னன் உதியன், தன் நாட்டில் குழுமூர் என்னுமிடத்தில் வழிச்செல்வோருக்காக அன்னதானம் செய்ய
ஏற்பாடு செய்திருந்தான் என்றும் கொள்ளலாம்.

நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் – அகம் 258/1-3

நன்னன் உதியன் என்பானது அரிய காவலையுடைய பாழிச்சிலம்பில்
பழமை மிக்க வேளிர்கள் பாதுகாவல் செய்துவைத்த
பொன்னைக்காட்டிலும் எய்துதற்கு அரியளாதலை நன்கு அறிந்தும்
– நன்னன் உதியன் என்பதனால், நன்னனுக்குச் சேரமன்னர் சார்பினால் உதியன் என்பதோர் பெயர் எய்திற்றுப்போலும்
– நாட்டார் உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *