Skip to content
பாரி

பாரி என்பவர் பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்தசங்ககால வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களில் ஒருவர். ஒரு வள்ளல்.

1. சொல் பொருள்

(வி) 1. பரப்பு, 2. பரவு, 3. கா

(பெ) சங்ககால வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களில் ஒருவர்.

2. சொல் பொருள் விளக்கம்

பாரி கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். இவர் வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். 

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

spread, expand, spread, guard, protect, a sangam period chieftain

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார்
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/13,14

“அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்”; “இனி காலம் தாழ்த்தமாட்டோம்” என்றனர்;
“பறையை முழக்குங்கள்” என்றனர்; பரப்பினர்
சிறந்த அணிகலன்களையணிந்தவளின் சார்பாக ஏறுகோள் விழா நடக்கும் செய்தியை;

பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் – நற் 218/6-8

நிழல் நீண்டு பரவிய
பருத்த அடியினைக் கொண்ட வேம்பின் பெரிய கிளைகளிருந்த
கபில நிறங்கொண்ட கூகையும் இரவில் ஒலியெழுப்பும்;

பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 442-444

பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு உயிர்களைக் காப்பது போல,
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து

கடையெழு வள்ளல்களில் ஒருவர்.
பறம்பு மலையைக் கொண்ட பறம்பு நாட்டை ஆண்டவர்.
கபிலர் என்ற சங்கப் புலவருக்கு நெருங்கிய நண்பர்.

பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல – நற் 253/7,8

பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3

புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/8,9

`பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!` - புறநானூறு 200

முல்லைச் செடியானது  தான் படரக் கொம்பில்லை என்று நாவால் கேட்கவில்லை என்றாலும், குறிப்பால் அறிந்து தனது தேரினைக் கொடுத்தான் எனப் பாடப்படுகின்றது.  இதனை ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும். முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி. 

பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி/பலவு உறு குன்றம் போல - நற் 253/7,8

பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் - குறு 196/3

மலர்ந்த மார்பின் மா வண் பாரி/முழவு மண் புலர இரவலர் இனைய - பதி 61/8,9

கடும் பரி புரவி கைவண் பாரி/தீம் பெரும் பைம் சுனை பூத்த - அகம் 78/22,23

உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் - அகம் 303/10

பாரி வேள்-பால் பாடினை செலினே - புறம் 105/8

கடவன் பாரி கைவண்மையே - புறம் 106/5

பாரி பாரி என்று பல ஏத்தி - புறம் 107/1

பாரி ஒருவனும் அல்லன் - புறம் 107/3

பாரி மாய்ந்து என கலங்கி கையற்று - புறம் 113/5

தேர் வண் பாரி தண் பறம்பு நாடே - புறம் 118/5

பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் - புறம் 176/9

பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் - புறம் 200/12

நெடு மா பாரிமகளிர் யானே - புறம் 201/5

கைவண் பாரிமகளிர் என்ற என் - புறம் 202/15

மலை கெழு நாட மா வண் பாரி/கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் - புறம் 236/3,4

பாரி பறம்பின் பனி சுனை போல - புறம் 337/6

பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள் - பழ:171/2

இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1

நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை - குறள் 20:3

தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *